Social Icons

Pages

Wednesday, April 18, 2012

லீசிங் சித்திரவதை!!

யாழ்ப்பாணத்தில் போருக்கு பின் வேரூண்றி இருக்கின்ற முதலாளித்துவ கம்பனிகள் தங்களினுடைய உற்பத்திகளை எப்படியாவது மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதை தான் முக்கிய நோக்கமா  கொண்டுள்ளனர்.
அந்த உற்பத்தி பொருட்களை வாங்குகின்ற அல்லது தவணை முறையில் பெற்றுக்கொள்ளுகின்ற மக்களிடம்; தங்களின் பொருட்களை கொடுத்து வசூல் செய்தவதனையே பிரதாமக முன் நிறுத்தியுள்ளார்கள்.
முதளாளித்துவ கம்பனிகளின் முக்கிய கொள்கையாக தங்களின் உற்பத்திகளை சந்தையில் கொண்டுபோய் சேர்ப்பதை தவிர வேறெதுவும் இருக்காது.
இதனை யாழ்ப்பாண மக்கள் புரிந்து வைத்துள்ளார்களாக என்று பார்க்கையில் அது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.  யாழ். மண்ணில் வேரூண்றிய கம்பனிகள் தாங்கள் விரிக்கின்ற வலையில் மக்களை சிக்க வைத்து  சீரழிய வைக்கின்றார்கள். முற்றிலுமாக மூளைச்சலவை செய்யப்பட்டு இந்த மக்களுக்கு பொருட்கள் திணிக்கப்படுகின்றன.

நாளுக்கு நாள் வாழ்க்கை செலவீனம் அதிகரித்து செல்லச் செல்ல அதற்கேற்றாற் போல் மக்களும் இசைந்து ஓடவேண்டிய தேவை உள்ளது.
குறிப்பாக யாழ்ப்பாண மக்கள் போர்க்கால சூழலில் இருந்து விடுபட்டு இப்போது அபிவிருத்தி என்ற புதிய சூழலில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். புதிய வரவுகள் யாழ்ப்பாண மக்களை ஓரளவேனும் நவீனமயப்படுத்தியுள்ளது. இச் சூழலில் இவர்களுக்கான தேவைகளும் வாழ்க்கை செலவும் அதிகரித்தே உள்ளன.



இந்த வாழ்க்கை செலவினை ஈடு செய்வதற்க்கு புதிய தொழில் முறைகளையும், நுட்பங்களையும் யாழ்ப்பாண மக்கள் தேடி செல்ல வேண்டி நிர்ப்பந்திக்கபட்டுள்ளார்கள். பெருமளவாக நடுத்தர வர்க்கத்தை கொண்ட யாழ்ப்பாண மக்கள் இந்த சூழலை சமாளிக்க முடியாதவர்காகவே இருக்கின்றனர்.
போர் ஓய்ந்த பின் வடக்கு நோக்கி குறிப்பாக யாழ்ப்பாணம் நோக்கி படையெடும் கம்பனிகள் பல. அதில் முக்கிய இடத்தினை பெற்றிருப்பது லீசிங் கம்பனிகள். இத்தகைய கடன் வழங்கும் நிறுவனங்கள் இலகு தவணைமுறை மூலம் பணத்தினைச் செலுத்தி எந்தவொரு வாகனத்தையும் உடன் பெற்றுக்கொள்ள வழி செய்கின்றன.

இத்தகைய முறை போருக்குப் பின்னர் கடந்த சில வருடங்களாகவே யாழ்ப்பாண மக்களிடம் மிகப் பெரியளவில் திணிக்கப்படுகின்றது என்று கூறலாம்.  இதற்க்கு முன்னைய காலங்களில் இம் முறை பற்றி இம் மக்கள் அறிந்திருக்கவில்லை. இந்த முறையில் வாகன கொள்வனவில் முக்கிய இடம் பிடித்திருப்பது முச்சக்கர வண்டி.


யாழ்ப்பாண நகர வீதிகளில் அதிகளவில் நொடிக்கொரு தடவை பார்க்க கூடிய வாகனங்களில் முச்சக்கர வண்டிகளும் முக்கியமானவை.
இலகு தவணை முறையில் தானே கொள்வனவு செய்கின்றோம் உழைச்சு காசு கட்டலாம் என்ற எண்ணத்தில் முச்சக்கர வண்டியினை ஓடும் ஓட்டுனர்கள் பின்னாளில் இதன் முலம் கிடைக்கின்ற இலாபத்pனை விட நட்;டத்தினையே எதிர் கொள்வதோடு பாரிய சவால்களையும் எதிர் கொள்ளுகின்றனர்.
இது பற்றி நல்லூரைச் சேர்ந்த முச்சக்கரவண்டி ஓட்டுனர் ஜெயக்குமார் கூறுகையில்.


“ஓரு லட்சம் ரூபா காசு முற்பணமாக கட்டி முச்சக்கர வண்டியினை வாங்கினேன். அதற்க்கு மாதாந்தம் ஒன்பதாயிரம் கட்டவேண்டியுள்ளது. நான்கு வருடத்துக்குள் முழுக்காசும் கட்டிமுடிக்கவேண்டும்.  இப்போது இரண்டு வருடத்திற்கான பணம் கட்டி பூர்த்தி செய்து விட்டேன.; மூண்று மாதத்துக்கு காசு கட்டவில்லை என்றால் ஆட்டோவினை லீசிங் கம்பனி பறிமுதல் செய்துவிடும். ஒரு நாளைக்கு 500 அல்லது 600 தான் உழைக்கமுடிகின்றது. யாழ்ப்பாணத்துக்கு ஓட்டத்துக்கு நான் வந்தா என்ற சாப்பாட்டிக்கே 200 அல்லது 300 ரூபா வேணும். பெற்ரோலுக்கு ஒரு தரம் ஓடிவர 150 ரூபா தேவை என்றார்.

சங்கத்தில் பதிவு இல்லாத முச்சக்கர வண்டிகள் தற்போது யாழப்பாணத்தில் அதிகமாக ஓடுகின்றன. ஆனால் இந்த முச்சக்கர வண்டிகள் யாவும் லீசிங் முறையில் பெறப்பட்டவை. நல்ல சாப்பாடு சாப்பிடுவதற்க்கு இந்த உழைப்பு போதுமானதாக இல்லை. இன்றைய காலகட்டத்தில் ஒரு நாள் சாப்பாட்டிக்கு 1000 ரூபா கூட காணாது. எப்படிதான் உழைத்து லீசிங் காசு மாதாந்தம் கட்டுறது?

எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றார்கள். அவர்களினுடைய தேவையினையே பூர்தி செய்வது ரொம்ப கடினமாக இருக்கின்றது. லீசிங்கில ஆட்டோவ வாங்கினதால அதை உழைச்சு கட்டுறதுக்கு போதுமான வருமானம் இல்ல, முயற்சி இருக்கு ஆனா உழைப்பு இல்ல” என்று கூறினார்.




யாழ்ப்பாண நகரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபடுகின்றன. இதில் இலகு தவணை கொடுப்பனவு முறையில் பெறப்பட்டு வேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளே அதிகம்.
மாதாந்த தொகையினை லீசிங் கம்பனிகளுக்கு செலுத்துவதற்க்கு உரிமையாளர்கள் கடும் பிரயத்தனங்களை மேற்கொள்ளுகின்றனர். மாதந்தம் முச்சக்கர வண்டி மூலம் போதுமான வருமானம் கிடைக்க வில்லை என்றால் தங்கள் வீட்டு நகைகளை அடமானம் வைச்சே அந்த பணத்தினை செலுத்துகின்ற நிலை பல முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. மீண்டும் கடன்களை பெற்று அந்த நகையினை அடமானத்தில் இருந்து எடுத்துக்கொள்கின்றார்கள். இவ்வாறு இவர்களின் நிலமை காணப்படுகின்றது.

திருமணம் செய்து பிள்ளைகளோடு இருக்கின்றவர்களின் குடும்ப பொருளாதார நிலைக்கும் திருமணம் ஆகாமல் இருக்கின்றவரின் குடும்ப பொருளாதார நிலைக்கும் சற்று வித்தியாசம் இருக்கின்றது. திருமணம் ஆகாமல் இருக்கின்றவர் தன் பொருளாதாரத்தினை ஏனைய குடும்ப உறுப்பினர்களோடு சேர்ந்து சமநிலை படுத்தினாலும் இலகு தவணை கொடுப்பனவு முறை மூலம் கொள்வனவு செய்த முச்சக்கர வண்டிக்கு மாதாந்த பணத்தினை செலுத்துவதற்க்கு பாரிய சவாலினை எதிர் நோக்குகின்றனர்.

இது பற்றி ஓட்டுமடத்தை சேர்ந்த கிருசாந் கூறுகையில்,



“எனக்கு 21 வயது நானும் தம்பியும் தான் குடும்பத்தை பார்க்கின்றம். அப்பாவுக்கு கண்ணில வருத்தம் அவர் வேலை செய்ய மாட்டார். மாசம் லீசிங்கிற்க்கு பத்தாயிரத்தி ஐந்நூறு ரூபா கட்டுறன். இந்த காசு குறிப்பிட்ட திகதிக்குள் கட்டாமல் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து கட்டினா வட்டியும் சேர்த்து கட்டவேண்டும். ஆறு மாசமா கட்டிக்கொண்டு இருக்கிறன். சில வேளையில கட்ட காசு இல்லையென்றால் வீட்டில இருக்கின்ற நகையினை அடமானம் வைச்சு தான் கட்டுவன். இப்ப தூர பயண ஓட்டங்கள் வாரது இல்ல. காரணம் இப்போதெல்லாம் வீட்டுக்கு வீடு ஆட்டோ வாங்கி வைச்சிருக்கினம். இப்ப யாழ்ப்பாணத்துக்கு வந்து போறதெல்லாம் அதில தான். ஆதனால எங்களுக்கு தூர பயண ஓட்டங்கள் வாறது இல்ல. 100 அல்லது 150 ரூபா வரக்கூடிய ஓட்டங்கள் தான் வருகின்றது. “இப்போ 500 ரூபாவுக்கு பெற்ரோல் அடிச்சா தான் கட்டுப்படி ஆகுது. லீசிங்கில எடுத்த ஆட்டோக்களுக்கு மண்ணெண்னை கலந்து பெற்ரோல் அடிக்கேலாது தனி பெற்ரோல் தான் அடிக்கணும்”. என்று கூறினார்.




இப்போது ஒரு லீற்றர் பெற்ரோலின் விலை 150 ரூபாவாக இருக்கின்றது. ஆனால் அது இன்னும் பதினைந்து ரூபாவால் அதிகரிக்கபடவிருக்கின்றது. இது இவ்வாறு இருக்க பெற்;ரோலின் விலை அதிகரிததன் காரணமாக முச்சக்கர வண்டிக்கான சவாரிக் காசும் அதிகரிக்க வேண்டிய தேவை உரிமையாளர்களுக்கு உண்டு.

ஆனால் இவ்வாறு அதிகரித்தால் பயணம் செய்ய யாரும் விரும்புவது இல்லை. அதனை விட சில உரிமையாளர்கள் பழைய விலையிலேயே சவாரி செய்வதால் பயணிகளும் அவர்களையே நாடிச்செல்லுகின்றனர். இதனால் பெற்றோல் விலையேற்றத்தினையும் இனி அதிகரிக்கப்பட இருக்கும் விலையேற்றத்தினையும் சமாளிக்க முடியாதவர்களாக முச்சக்கர வண்டி  உரிமையாளர்கள் திண்டாடுகின்றனர்.

“இப்ப லீசிங் முறை என்றது எங்களை ஒட்டுமொத்தமாக சித்திரவதை செய்யுது”. என்கிறார் நல்லூரைச் சேர்ந்த பாஸ்கரன்.




 “இந்த முறையானது முதலாளித்துவ வர்க்கத்துக்கு ஏற்புடையதாக இருக்கும். ஆனா சாதாரண தொழிலாழிக்கு 100 வீதம் கஸ்ரத்தினையே கொடுக்கும். ஒரு மாத்தில பத்து நாள் திருமண சடங்கு, செத்தவீடு என்று ஒதுக்கினால் இருபது நாள் உழைக்கிறம் இதில பதினைந்து நாள் உழைத்து ஐந்து நாள் வீட்டுக்கு உழைக்கிறம். வீட்டுக்கு உழைக்கிறதா? அல்லது லீசிங்கிற்க்கு உழைக்கிறதா? என்று தெரியல.

மூன்று இலட்சம் பெறுமதியான ஆட்டோ வாங்கினா, அதுக்கு லீசிங் கட்டி, வட்டி கட்டும் போது ஆறு இலட்சம் ஆகுது.  யாழ்ப்பாணத்துக்கு இந்த லீசிங் முறை புதுசாக இருக்கிறதால சரியாக மேற்கொள்ள தெரியவில்லை. ஆனா கொழும்பில உள்ளவங்களுக்கு இது பழக்கப்பட் விடயம். இதனை சரியான முறையில் செய்வாங்க.”
என்று கூறினார்

இலகு தவணை கொடுப்பனவு முறையில் கொள்வனவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிக்கான தொகையினை 3 மாதங்கள் கடந்தும்  வாடிக்கையாளர் செலுத்தாத பட்சத்தில் அவை  பறிமுதல் செய்யப்பட்டு விடும் என்பதும் இவர்களின் பயம்.
அவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டால்  நாற்பதாயிரம் அல்லது ஐம்பதாயிரம் செலுத்தியே முச்சக்கர வண்டியை மீளப் பெற வேண்டும். அப்படி அவர் இத் தொகையினை செலுத்தி ஆட்டோவை மீள பெற்றுக்கொள்ளதா சந்தர்ப்பத்தில் அவர் அந்த வண்டிக்காக செலுத்தி வந்த பணமும் அவ்வளவு தான்.
காரணம் முச்சக்கர வண்டி சந்தைக்கு விடும் போதே ஒரு இலட்சம் அதன் பெறுமதியில் குறைந்து விடும்.

“லீசிங் தொகையினை செலுத்தி முடிப்பதற்க்கு நான்கு வருடங்களே மட்டுப்படுத்தப்பட்டிருக்கு. நான்கு வருடத்திற்கு மேல் ஒரு வாடிக்கையாளர் கேட்பாராக இருந்தால் அதனை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டம். காரணம் 4 வருடத்துக்கு மேல் முச்சக்கர வண்டியின் பெறுமதி குறைந்து விடும். தற்போது ஒரு முச்சக்கரவண்டியின் பெறுமதி ஐந்து லட்சத்தி பன்னிராயிரத்தி ஐநூறு கொண்டது”. லீசிங் கம்பனி ஊளியர் ஒருவர் தெரிவித்தார்.

மொத்தத்தில் லீசிங் என்ற வார்த்தையைக் கேட்டாலே சித்திரவதை என்பது போல உணர்கிறார்கள் பெருமளவான யாழ்ப்பாணத்து ஆட்டோ சாரதிகள். வேர்வை சிந்தி உழைக்கும் வர்க்கம் ஒருபக்கம். தயவு தாடவனியமே இன்றி அவர்களின் இரத்தத்தை உறிஞ்சும் சில முதலாளித்துவ லீசிங் கம்பனிகள் மறுபக்கம்.

இவர்களிடம் இருந்து தொழிலாளர்களைக் காப்பாற்றப் போவது யார்? அல்லது அவர்களாகவே விளிப்புணர்வு பெறுவது எப்போது…..?

No comments: