Social Icons

Pages

Monday, December 19, 2011

தமிழரின் தொன்மை நாகரிகத்தை சொல்லிய ”பாலை” திரைப்படம்

தமிழ்த் திரைப்படம் ஒன்று முதல் முதலாக தமிழ்நாட்டின் தொன்மை நாகரிகத்தைப் படம் பிடித்துக் காட்டியுள்ளது.

சங்க காலத் தமிழர் வாழ்க்கையை இலக்கியங்களில் மட்டுமே படித்துள்ள நமக்கு அதனை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் அறிமுக இயக்குநர் ம.செந்தமிழன். பாலை என்ற இந்தப் படம் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஒரு இடத்தைப் பிடித்துவிட்டது எனலாம்.


தமிழ் மண்ணின் மைந்தர்களுக்கும் வந்தேறிகளுக்கும் இடையில் நடந்த போரே படத்தின் மய்யக் கரு. வளமான நிலப் பகுதியில் வாழ்ந்துவரும் முல்லைக்குடி மக்களை வந்தேறிகளான ஆய்க்குடியினர் விரட்டி அடித்து நிலத்தைக் கவர்ந்து விடுகின்றனர். தமது சொந்த மண்ணை இழந்த மக்கள் வறண்ட பாலை நிலத்திற்கு வேறு வழியின்றி குடிபெயர்கின்றனர். அங்கு நிலவும் வறட்சியால் கடும் துன்பம் அடையும் அவர்கள் மீண்டும் தம் மண்ணை மீட்கப் போராடுவதே படத்தின் கதை.


தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளை மிக நுணுக்கமாகப் படமெங்கும் காட்சியாக்கியிருக் கிறார்கள். தொடக்கத்தில் தமிழர்களிடம் கடவுள் என்ற ஒன்று கிடையாது. அது பின்னாட்களில் நம்மீது திணிக்கப்பட்டது. அதனைச் சரியாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். அதாவது கடவுள் குறித்தோ, கடவுள் நம்பிக்கை குறித்தோ  எந்தக் காட்சியும் படத்தில் இல்லை. . ஏனென்றால் தமிழர் வாழ்வில் இல்லாத கடவுளால்தான் இன்று மதங்களும்.ஜாதிகளும் தமிழனைப் பிரித்து வைத்து நமக்குள்ளே மோதிக்கொள்ளும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. நம் சமூகத்தில் கடவுள் இல்லை என்பதைச் சொல்லவேண்டியது தமிழர் சமூக வரலாறு குறித்து எழுதுபவர்கள்,பேசுபவர்கள், படம் எடுப்பவர்களின் கடமை. இது நேர்த்தியாக உள்ளது இத்திரைப்படத்தில்


தோல்வியில் இருந்து பாடம் கற்றல், அனுபவ சாலிகளின் அறிவுரை கேட்டல், மணவாழ்க்கைக்கு முந்தைய உடன்போக்கு, அனைவரும் கூடி அமர்ந்து கள் உண்ணுதல் உள்ளிட்ட அன்றைய சமூகக் கூறுகளும், ஒற்றைக் காலடித் தடத்திலேயே ஊரார் அனைவரும் ஒருவர் பின் ஒருவராகக் கால்வைத்து நடந்து தப்பிச் செல்லுதல், மீன் பிடிக்க வலை அமைத்தல், வண்டிகள் தொலைவில் வருவதை அறிதல் போன்ற உத்திகளும் காட்சிகளாக விரிந்தது அருமை.

”பாலை” திரைப்படம் பற்றி கூறுகிறார் இயக்குனர் செந்தமிழன்



சில நாட்களுக்கு முன் பாலையின் முன்னோட்டக் காட்சியைப் பார்த்த இயக்குனர் பாலுமகேந்திரா, ’பாலை உலகத் திரைப்பட வரலாற்றில் குறிக்கத்தக்க இந்தியப் படமாக இருக்கும். இது ஒரு தமிழ்ப் படம் என்பதில் எனக்குத் தனிப்பட்ட கர்வம் உண்டு. எனது 45 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் எந்தப் படத்தைப் பார்த்தும் ’இந்தப் படத்தை நான் இயக்கவில்லையே’ என ஆதங்கப்பட்டதில்லை. பாலை படம் என்னை அப்படி ஏங்கச் செய்கிறது’ என்று கடிதம் எழுதிக் கொடுத்தார்.

சத்தியமாக இவ்வார்த்தைகளுக்கான தகுதி எனக்கில்லை. இவை ஒரு மூத்த படைப்பாளியின் உணர்ச்சிவய வார்த்தைகள்.

முன்னோட்டக் காட்சி பார்த்த கார்ட்டூனிஸ்ட் பாலா முதல் மென்பொருள் இளம் பொறியாளர் விர்ஜினியா ஜோசபின் வரை பாலையை மனமார வாழ்த்துகிறார்கள்.

இவர்கள் அனைவரின் வேண்டுகோளும் மக்களை நோக்கி இருக்கிறது.
‘அவசியம் பாலை படத்தைப் பாருங்கள்’ என்கிறார்கள் இவர்கள்.

எனக்கும் என் குழுவினருக்குமான வேண்டுகோள் மக்களை நோக்கி இல்லை. அதற்கான சூழலும் எழவில்லை. எங்கள் வேண்டுகோள் திரையுலகை நோக்கி இருக்கிறது.

                     
தமிழகத்தின் சரி பாதி பகுதிகளில் பாலையைத் திரையிட ஒரு திரை அரங்கு கூட கிடைக்கவில்லை. இதற்கான காரணங்கள் நிறைய. அவற்றை நான் அடுக்க விரும்பவும் இல்லை; இப்போது அதற்கான அவகாசமும் இல்லை.

ஓர் உண்மையை உரத்துச் சொல்ல விரும்புகிறேன்.
‘அதிகாரமும் பெரும் பணமும் இருந்தால் குப்பைகளுக்கும் திரையரங்குகள் திறக்கும். இல்லையென்றால், இயக்குனர், தயாரிப்பாளர் முகங்களில் குப்பை வீசப்படும்’

2 comments:

ஷஹன்ஷா said...

அருமையான தமிழ் திரைப்படம் தொடர்பான அழகான விமர்சன பதிவு... வாழ்த்துகள்

B.R.CASTRO said...

நன்றி தோழமை